டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மரணம்

சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் (48) காலமானார். 90களின் இறுதியில் சன் மியூசிக் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜேவாக பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். துருதுருப்பான இவரது பேச்சுக்கும் இவரது ஹேர்ஸ்டைல் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாணிக்கும் தனி ரசிகர் கூட்டம் இருந்தது. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து விலகி, சிங்கப்பூரில் தங்கியிருந்தார். கடந்த பல மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆனந்த கண்ணன் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார். அவருடைய மறைவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனந்த கண்ணனின் மனைவி ராணியும் சிங்கப்பூரில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

Related Stories: