டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: அக்டோபர் 24ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்: 7-வது 20 ஓவர் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு

துபாய்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் அக்டோபர் 24ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 20-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி. டி20 உலக கோப்பை தொடரில் குரூப் 2 பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள 7-வது  20 ஓவர் உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெறுகின்றன.

இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளன. துபாயில் வரும் அக்டோபர் 24-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. முதல் அரையிறுதி போட்டி  அபுதாபியில் நவம்பர் 10-ம் தேதியும், 2-வது அரையிறுதி துபாயில் 11-ம் தேதியும் நடக்கிறது, இறுதிப் போட்டி நவம்பர் 14-ம் தேதி துபாயில் நடக்கிறது. இந்திய அணி 2-வது போட்டியில்  அக்டோபர் 31-ம் தேதி நியூஸிலாந்துடன் மோதுகிறது இது துபாயில் நடக்கிறது.

நவம்பர் 3-ம் தேதி அபுதாபியில் நடக்கும் 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த தகுதி சுற்றில் வங்காளதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்றுப்போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் விளையாட தகுதி பெரும்.

Related Stories: