சென்னை: மறைந்த கழக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மகத்தான
மக்கள் தொண்டரையும், புரட்சித் தலைவர் மீது மாறாப் பற்றுகொண்ட மாவீரரையும் இழந்திருக்கிறது. ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரியவராய், அவர்களது வாழ்வில் இறுதி நிமிடம் வரை உறுதுணையாக இருந்தவர் கழக அவைத் தலைவர் மதுசூதனன். 1953-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினைத் தொடங்கி, அதனைத் தொடர்ந்து வட சென்னை பகுதியில் எம்.ஜி.ஆர். பெயரில் மன்றங்களை அமைத்து, சிறுவர்கள் படிக்கும் வண்ணம் எம்.ஜி.ஆர். பெயரில் இரவு பாடசாலைகளைத் தொடங்கி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகள் அனைவராலும் ``அஞ்சா நெஞ்சன்’’ என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட மதுசூதனன், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், கழக கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு கழகப் பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு; சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிகச் சிறந்த முறையில் மக்கள் பணியாற்றியவர்.