கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் கட்டிடம் மற்றும் இடிப்பாடு கழிவுகளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் தலா 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களால் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் சார்பில் 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும். இதை மீறும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, 1 டன் அளவிற்கு குறைவாக கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ.2 ஆயிரமும், 1 டன் அளவிற்கு அதிகமாக கட்டிட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: