அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி, துயரம் அடைந்தேன்..! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி, துயரம் அடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி; அ.தி.மு.க அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.இ.மதுசூதனன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன்.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க.வில் முன்னாள் முதலமைச்சர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அவர்களால் கட்சியில் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர். அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக பணியாற்றிய அவர், அக்கட்சியின் வளர்ச்சிக்கு பட்டிதொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடித் தலைவரை அ.தி.மு.க. இழந்திருப்பது பேரிழப்பாகும். இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கைத்தறித்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

சாதாரண தொண்டர் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாக பழகியவர். ஏழை - எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அ.தி.மு.க.விற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்த திரு.மதுசூதனன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: