சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 539 பெரிய கோயில்கள் உள்ளதன. இதில், சென்னையில் மட்டும் 52 கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால், கோயில்களில் முழுமையான தூய்மை பணியினை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாநிலம் முழுவதும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதை பயன்படுத்திக்கொண்ட அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், பெரிய கோயில்களில் 3 நாட்கள் முழுமையான தூய்மைப்படுத்தும் பணிகளை (மாஸ் கிளீனிங்) மேற்கொள்ள கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் 3 நாட்கள் தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.