தரை, மண்டபம், தூண்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் தமிழகத்தில் 539 பெரிய கோயில்களில் முழுமையாக தூய்மைப்படுத்தும் பணி: ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 539 பெரிய கோயில்கள் உள்ளதன. இதில், சென்னையில் மட்டும் 52 கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால், கோயில்களில் முழுமையான தூய்மை பணியினை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாநிலம் முழுவதும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதை பயன்படுத்திக்கொண்ட அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், பெரிய கோயில்களில் 3 நாட்கள் முழுமையான தூய்மைப்படுத்தும் பணிகளை (மாஸ் கிளீனிங்) மேற்கொள்ள கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் 3 நாட்கள் தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.

அதன்பேரில், சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருத்தணி முருகன் கோயில் உட்பட மாநிலம் முழுவதும் நேற்றுமுன்தினம் 539 கோயில்களில் முழுமையான தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளில் உழவார பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கோயில் பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக முழுமையாக தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

Related Stories: