இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி, துப்பாக்கியால் சுட்டது மனிதாபிமானமற்ற செயல். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் படகுகள், மீன்பிடிச்சாதனங்கள் பெருத்த சேதமுறுகின்றன. லட்சக்கணக்கில் பொருட்சேதம், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அன்றாட மீன்பிடித்தொழில் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலை இனியும் நீடிக்கக்கூடாது.

எனவே நாகை மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் ஈவு இரக்கமற்ற இச்செயலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசிடம் பேசி தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் இனியும் தொடரக்கூடாது.

இதற்காக இந்திய அரசும், வெளியுறவுத்துறையும் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேசி இந்திய மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை கடற்படையினரால் இனிமேல் எவ்வித இடையூறும், பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: