திருச்சி: திருச்சியில் தடை விதிப்பு காரணமாக ஆடி 18 கொண்டாட பொதுமக்கள் யாரும் காவிரி கரைக்கு வரவேண்டாம் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து திருச்சி மாநகர காவல்ஆணையர் அருண் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முழு ஊரடங்கு வரும் 9ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது.திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் அரசு உத்தரவை மீறிபவர்களை தடுக்க சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக நேற்று குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சார்பாக அண்ணாசிலை ரவுண்டானாவில் சிறப்பு வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.