பாட்னா: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி இருக்கிறார். பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம்தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”உண்மையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். நீண்ட நாட்களாக செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை கேள்விப்பட்டு வருகிறோம். மக்களும் இது குறித்து பேசி வருகின்றனர். எனவே இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.