கொரோனா தொற்று பரவலை தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், என தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தியுள்ளார். மண்ணடி டான் பாஸ்கோ பள்ளியில் பிளாஸ்டிக் டிரேடர்ஸ் அசோஷியேஷன் சார்பில் 1000 பேருக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர். பின்னர் தயாநிதி மாறன் எம்பி நிருபர்களிடம் கூறுகையில்,கொரோனா 3ம் அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதனை தடுக்க மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.  மேலும் சென்னையில் 9 இடங்களில் கடைகளுக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது.  

கடந்த 4 நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததற்கு மக்களின் அலட்சியப்போக்கு என்பதால் மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,’ என்றார். இதனை தொடர்ந்து  அமைச்சர் பி.கே.சேகர் பாபு நிருபர்களிடம் கூறுகையில், ‘கோயில் ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றும் பணியில் ஏழை எளிய மக்களின் வீடுகள் இருக்கும் பட்சத்தில் தகவல் தெரிவிக்கபட்டால் அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கவோ அல்லது கோயில் இடங்களிலே புதிய குத்தகை முறையில் இடம் வழங்கவும் தயார் நிலையில் உள்ளோம். தமிழகத்தில் இருந்து களவு போன கோயில் சிலைகள்  கண்டுபிடிக்கப்பட்டு  வருகிறது. மேலும் கடத்தி சென்றவர்கள் குறித்தும் கடத்தி செல்லப்பட்ட இடம் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

Related Stories: