சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணி கடந்த 2018 மே 8ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்டுமான பணியை கவனிக்க கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் நியமிக்கப்பட்டார். அவரது கண்காணிப்பின் பேரில் இப்பணிகள் நடந்தது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்துக்கு போதுமான அனுபவம் இல்லாத காரணத்தால் 2 ஆண்டுகளாக நடந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபரில் தான் பணிகள் முடிக்கப்பட்டன. இந்த நினைவிட கட்டுமான பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகள் மேலானதால், முன்னாள் முதல்வரின் கோபத்துக்கு ஆளாகி, ஜெயலலிதா நினைவிட பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சென்னை மண்டல கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் கண்காணிப்பு பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.