சென்னை: ரிப்பன் மாளிகையை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் மேல் பல ஆண்டுகளாக இருந்த ‘தமிழ் வாழ்க’ என்ற பெயர் பலகை கடந்த அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்த உடனே சென்னை மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் ‘தமிழ் வாழ்க, தமிழ் வளர்க’ என இரண்டு பெயர் பலகைகள் மீண்டும் நிறுவப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கை தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.