போதிய அளவு தடுப்பூசி வழங்கவில்லை: ஆந்திர முதல்வர் குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன், தாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அவர் பேசியதாவது: கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கு பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. ஆனால் தடுப்பூசியை ஒன்றிய அரசு போதிய அளவு ஒதுக்கீடு செய்யவில்லை. மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 25 சதவீதத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 2.8 சதவீதமாக பாதிப்பு குறைந்துள்ளது.

இதற்கு அனைவரின் ஒத்துழைப்பே காரணம். 3வது அலை வருமா? வராதா? என்று தெரியவில்லை. ஆனால், ஆகஸ்டு இறுதிக்குள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருவதால் இந்தமுறை வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: