‘தில்’லான சிறுவனை திகிலுடன் பார்த்த டாக்டர்கள் கடித்த பாம்புடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற 7 வயது சிறுவன்

* தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தான்

* காஞ்சிபுரம் அருகே பரபரப்பு சம்பவம்

சென்னை: தன்னை கடித்த பாம்பை பார்த்து பயப்படாமல் அதை கையில் எடுத்துக் கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற சிறுவனையும், அந்த பாம்பையும் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறுவனை ஐசியுவில் அனுமதித்து அவனுக்கு சிகிச்சை அளித்து, உயிரை காப்பாற்றினர். இந்த சம்பவம் காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் தர்ஷித் (7). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3வது வகுப்பு படித்து வருகிறான். இவன்,  கடந்த 16ம் தேதி, வெள்ளைகேட் கிராமத்தில் தனது பாட்டி வீட்டிற்கு சென்று, வயலில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது, தன்னை ஏதோ ஒன்று கடித்ததை உணர்ந்த சிறுவன் தர்ஷித், அதை பிடிக்க விரட்டிச் சென்றான். பிடித்த பிறகுதான், அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தெரியவந்துள்ளது. பின்னர் அந்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு, பெற்றோரின் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றான். பாம்பு மற்றும் சிறுவனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவனுக்கு, முதலுதவி சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தனர். ஆனால், சிறுவனுக்கு பாம்பு கடித்த பிறகு ஏற்படும் எந்த மாற்றமும் உடலில் தெரியவில்லை. இதனால், 2 நாளைக்கு பிறகு அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மறுநாள், சிறுவனின் கால் வீக்கமடைந்து, உடல் நலம் மோசமடைய தொடங்கியது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை டாக்டர் பூவழகி தலைமையிலான டாக்டர்கள் குழு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தது. தொடர்ந்து ஒரு வார காலம் கொடிய பாம்பு விஷம் முறிக்கும் சிகிச்சைக்கு பிறகு, தற்போது சிறுவன் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளான்.

இதுகுறித்து குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனிவாசன் கூறியதாவது: சிகிச்சையின்போது, சிறுவனிடம் நாங்கள், ‘பாம்பை எதற்கு கையில் கொண்டு வந்தாய்’ என கேட்டோம். அதற்கு, ‘நான் பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே, என்னை எது கடித்தது என்று உங்களுக்கு தெரியும் என்று சிறுவன் பதில் அளித்தது எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது’ என்றார். மேலும் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவினரை இயக்குனர் டாக்டர் எழிலரசி பாராட்டினார்.

Related Stories: