ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 11வது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் 24ம் தேதியுடன் முடிவடையும்  நிலையில் 11-வது முறையாக 6 மாதம் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என்று 154 பேரிடம் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் மருத்துவக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தவழக்கில் 90 சதவீதம் ஆணையம் விசாரணை முடித்துள்ளதால் அப்போலோ கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் 10 வது முறையாக  கொடுக்கப்பட்ட 6 மாதம் கால அவகாசம் இன்று ஜூலை 24ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே காலநீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியதை தொடர்ந்து 6 மாதங்கள் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 மேலும் ஆணையத்தில் இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி மாநிலங்களவை உறுப்பினரான தம்பிதுரையிடம் விசாரணை நேரடியாக  நடைபெற்றது. இதன் பின்பு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த 26 மாதங்களாக  விசாரணை நடைபெறாமலே தமிழக அரசு காலநீட்டிப்பு செய்து வருகிறது.

Related Stories: