நடிகை குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார் : விளக்கம் கேட்டு ட்விட்டர் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம்

சென்னை : நடிகை குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார் என்று விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ கடந்த 20ம் தேதி காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமது ட்விட்டர் பக்கத்தை சிலர் ஹேக் செய்து விட்டதாகவும் தன்னுடைய பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருந்தார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தை தவறாக பயன்படுத்தக் கூடும் என்ற எண்ணத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்த அவர், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த புகார் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் அந்த பக்கத்தை குஷ்பூவிற்கே வழங்குவதோடு, அவரது பக்கத்தை முடக்கியவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தரும்படி, ட்விட்டர் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

Related Stories: