அண்ணாநகர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, கொரோனா சிறப்பு வார்டு, தடுப்பூசி முகாம் என பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக, அனைத்து மாநகராட்சிகளிலும் குப்பை, கழிவுபொருட்கள், மருத்துவ கழிவுகள் போன்றவை உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும். மேலும், அந்தந்த பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு, தூய்மையாக இருக்க வேண்டுமென உத்தரவிட்டு இருந்தார். அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி அமைந்தகரை 8வது மண்டலத்துக்கு உட்பட்ட அமைந்தகரை, அரும்பாக்கம், வில்லிவாக்கம், டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கடந்த சில நாட்களாக தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.