மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி வாரி விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா?.. மக்களவையில் டி.ஆர்.பாலு, எம்.பி., கேள்வி

டெல்லி: மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021-இல் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி வாரி விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா? என மக்களவையில் டி.ஆர்.பாலு, எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார். திராவிட முன்னேறக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான திரு டி.ஆர்.பாலு அவர்கள், நேற்று 20 ஜூலை 2021, மக்களவையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021-இல், பிற்படுத்தப்பட்டோருக்கான, சாதி வாரி விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா? என்றும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடுகளில் தொடரும் சட்டச் சிக்கல்களை சரி செய்ய, ஒன்றிய அரசால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

என்றும், மாண்புமிகு ஒன்றிய உள்துறை இணையமைச்சர், திரு நித்தியானந்த ராய் அவர்களிடம், விரிவான கேள்வியை எழுப்பினார். ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அவர்கள் அளித்த பதில் பின் வருமாறு:- மார்ச், 2019-இல் வெளியிடப்பட்ட அரசிதழின்படி, ஒன்றிய அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021 நடத்தப்பட்டு வருகின்றது என்றும், கொரோனா கொள்ளை நோய்த் தொற்றினால், இந்த நடவடிக்கைகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும், அரசியல் சட்ட விதிகளின்படி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது என்றும், மக்களவையிலும்,

மாநில சட்டப்பேரவைகளிலும், மக்கள்தொகைக்கேற்ப தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்களின் இடஒதுக்கீட்டிலும், ஆவன செய்யப்பட்டுள்ளது என்றும், பல்வேறு நீதிமன்றங்களில் வரும் சட்டச் சிக்கல்களுக்கும் தீர்வுகள் காண்பதற்கு, ஒன்றிய அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது என்றும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர்,   திரு டி.ஆர்.பாலு அவர்கள், மக்களவையில், எழுப்பிய கேள்விக்கு, மாண்புமிகு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் திரு நித்தியானந்த ராய், அவர்கள், விரிவான பதில் அளித்துள்ளார்.

Related Stories: