ஆவடி: ஆவடி மாநகராட்சி 3வது வார்டில் பிருந்தாவன் நகர் அமைந்துள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட வீடுகளில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் குறைந்த மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசரிடம், அப்பகுதி மக்கள் குறைந்த மின்சார பிரச்னையை தீர்க்க வலியுறுத்தினர். இதனையடுத்து, அவர் பிருந்தாவன் நகருக்கு வந்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தார். பின்னர், அங்கு அவர் கூடுதலாக ஒரு மின்மாற்றி அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சமீபத்தில் அங்கு புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இதனை நேற்று காலை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மேலும், அவர் அதே பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் ரூ.7.5 லட்சம் செலவில் மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு, குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளையும் தொடங்கிவைத்தார். மேலும், அவர் அப்பகுதியில் கொரோனா தடுப்பு ஊசி முகாமையும் தொடங்கி வைத்தார். இதன் மூலம், அங்கு ஒரேநாளில் 300க்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதில் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் கண்ணன், சந்திரசேகர், மாநகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், திமுக மாநகர பொறுப்பாளர் ஜி.நாராயணபிரசாத், முன்னாள் கவுன்சிலர் பதாகை வீ.சிங்காரம், வட்டச்செயலாளர் பு.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.