நாடு முழுவதுமே தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது: மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு

டெல்லி: செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறக்க வேண்டும் என திமுக எம்.பி. வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரண்டாவது நாளான இன்று மக்களவை தொடங்கியவுடன் பெகாசஸ் உளவு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கங்களை எழுப்பின. இதையடுத்து அவை நடவடிக்கையை பிற்பகல் 2 மணி வரைக்கும் சபாநாயகர் ஓம்.பிர்லா ஒத்திவைத்தார். இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து மாநிலங்களவையிலும் அவையின் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து மீண்டும் மாநிலங்களவை கூடியது. மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா; நாடு முழுவதுமே தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒன்றிய அரசு தடுப்பூசி உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் தடுப்பூசி உற்பத்தி செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் தடுப்பூசி தயாரிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில அரசுகள் தடுப்பூசி தயாரிக்க ஆர்வம் காட்டுகின்றன.

ஒன்றிய அரசு நிதி உதவி செய்து மாநிலங்களே தடுப்பூசி உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறக்க வேண்டும். 3-ம் அலை வருவதற்கு முன் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: