தலைமை செயலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சிக்கு தூண்டிய முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மீது வழக்கு: முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி, மோலையானுர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி நேற்று வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில்: கடந்த 2014ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மாவட்ட ஆட்சியர் இடத்தில் தகவல் கூறி தன்னுடைய ஊராட்சிமன்ற பதவியை ரத்து செய்தார். இந்த மன உளைச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பு ஏற்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் விரக்தி அடைந்து தற்கொலை முயற்சி வரை சென்றேன். இந்த அறிந்த கே.பி அன்பழகன் நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பதவியை பறிப்பதற்காக நாம் இருவரும் ஒன்றாக இணைந்து போயஸ் கார்டனில் புகார் கொடுக்கலாம் என்று கூறினார்.

அதன்படி உளவுத்துறை மற்றும் விஜிலன்ஸ் கமிட்டி முதல்வரின் தனி செயலாளர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு போன்ற இடங்களில் கொடுத்த புகார் மனுக்களை அனைத்தையும் அமைச்சர் பழனியப்பன் கைக்கு சென்றது. இதனால் 2014ம் ஆண்டு கே.பி அன்பழகன் மாவட்ட செயலாளர் பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. இதனால் கோபம் கொண்ட கே.பி அன்பழகன் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்த என்னிடம் இனி எப்படி போராடினாலும் நமக்கு தீர்வு கிடையாது என்று மூளை சலவை செய்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கின்ற போது பெட்ரோல் கேனை கொண்டு வந்து தலைமை செயலகத்திற்குள் உள்ளே கொடுக்கிறேன்.

அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியே வரும் போது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியை மேற்கொள் என்று தூண்டினார். அதன்பிறகு நான் தான் மாவட்ட செயலாளர், அமைச்சர் என்று தன்னை ஆசைவார்த்தை கூறினார். உன்னுடைய அனைத்து வழக்குகளையும், கடன் தொல்லைகளையும், ஊராட்சிமன்றத் தலைவர் பதவி மற்றும் கட்சி பதவி போன்றவை மீண்டும் பெற்றுத் தருகிறேன் என்று கூறினார். நானும் ஒத்துக் கொண்டு அவர் கூறியது போல் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதியன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து வெளியே வரும்போது அவர் ஏற்கனவே கொடுத்த பெட்ரோலை மேலே ஊற்றி கொண்டு எதிர்ப்பு தெரிவித்தேன்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வையில் பட்டதால் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் என்னையும் என் மனைவியையும் காவல்துறையின் பாதுகாப்போடு சொந்த ஊருக்கு அனுப்பி வதை்தனர். எனவே, முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மீது தற்கொலை முயற்சிக்கு தூண்டிய வகையில் தமிழக முதல்வர் மற்றும் டிஜிபியிடம் புகார் மனு கொடுக்கப் போகிறேன் என்று முன்கூட்டியே தெரிந்ததால் ஏதாவது புகார் மனுக்களை தலைமைக்கு கொடுத்தால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். எனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: