சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு சார்பில், ஒன்றிய அரசு கொண்டு வர உள்ள ‘தேசிய கடல் மீன்வள மசோதா’வை கண்டித்து கருப்பு கொடி ஏந்தியும், படகுகளில் கருப்பு கொடி கட்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடந்தது. இதையடுத்து நிருபர்களை சந்தித்து கூட்டமைப்பினர் கூறியதாவது: தேசிய கடல் மீன்வள மசோதாவில், மீனவர்கள் கடலுக்கு செல்ல உரிமம் பெறவேண்டும், அந்த உரிமத்தை பரிசோதிக்க அதிகாரி நியமிக்கப்படுவார். கடலில் எந்த வலையை பயன்படுத்தவேண்டும் என அவர்தான் தெரிவிப்பார். மேலும், 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை தாண்டி சென்று மீன்பிடிக்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.