கோவாக்சின் 2-ம் தவணை தடுப்பூசிக்கு 20 லட்சம் பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: கோவாக்சின் தடுப்பூசிக்கான 2 வது தவணையை வெறும் 10% பேர் மட்டுமே போட்டுள்ளனர். எனவே, அதிகளவில் கோவாக்சின் தடுப்பூசியை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசிதான் ஒரே வழி என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழக அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி போடும் நபர்களின் எண்ணிக்கை, ஆர்வம் அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு, கோவிஷீல்டு தடுப்பூசி அதிகளவில் ஒன்றிய அரசிடம் இருந்து வருகிறது. அதாவது, ஜூன் மாதம் வரை 35 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி 7 லட்சம் தான் வந்துள்ளது.

இந்த மாதம் கோவிஷீல்டு தடுப்பூசி 15 லட்சம் கிடைத்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி 3 லட்சம் தான் கிடைத்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி 1 மற்றும் 2ம் டோஸ் காலஇடைவெளி 84 நாட்கள். ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு வெறும் 8 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. போதிய அளவு சப்ளை இல்லாத காரணத்தால், 2ம் டோஸ் கோவாக்சின் போட முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். அந்த வகையில், 20 லட்சம் பேர் 2ம் தவணைக்காக காத்திருக்கின்றனர். அதாவது, 10% மக்கள் மட்டுமே 2ம் தவணையை முடித்துள்ளனர். 90% மக்கள் காத்திருக்கின்றனர். அதனால் கோவாக்சின் தடுப்பூசிகளை கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: