பெரம்பூர்: காதலித்து திருமணம் செய்து தன்னை ஏமாற்றி அசிங்கப்படுத்திவிட்டு தலைமறைவாக இருக்கும் கணவருக்கு தண்டனை பெற்றுதர 46 ஆண்டுகளாக மூதாட்டி போராடி வரும் சம்பவம் அயனாவரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் இளவரசி (65). இவரும், விஜயகோபாலன் என்பவரும் காதலித்து கடந்த 1975ம் ஆண்டு பெங்களூரில் திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சென்னைக்கு வந்து மயிலாப்பூர், வால்டாக்ஸ் ரோடு, கெல்லீஸ், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து 7 மாதம் குடும்பம் நடத்தினர். பின்னர், தனக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்து இருப்பதாக கூறி, விஜயகோபாலன் அங்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இளவரசிக்கு பெண் குழந்தை பிறந்தது. பல ஆண்டு ஆகியும் விஜயகோபாலன் திரும்பி வரவில்லை. இதனிடையே, 1985ம் ஆண்டு விஜயகோபாலன் வேறு பெண்ணை திருமணம் செய்து இருப்பதாக இளவரசிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அதே ஆண்டு இளவரசி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த சமயத்தில் விஜயகோபாலன் காவல் துறையில் சேர்ந்து போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். புகார் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தபோது, இளவரசியின் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை. குழந்தை என்னுடையது என நிரூபித்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.