3வதும் மகளாக பிறந்ததால் பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற தாய் கைது: நாமக்கல் அருகே பயங்கரம்

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா(28), தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி(27). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான கஸ்தூரிக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 2 நாட்களில், கஸ்தூரி கைக்குழந்தையை தூக்கி கொண்டு, நாமக்கல் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் அங்கிருந்து வெளியேறினார். இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவமனை டீன் சாந்தா, எருமப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் லலிதாவிற்கு தகவல் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கஸ்தூரி எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டி இந்திரா காலனியில் உள்ள தனது தாய் வீட்டில், குழந்தையுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஸ்தூரி மற்றும் அவரது கை குழந்தையை தினந்தோறும் கண்காணிக்க, ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செவிலியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக தகவல் பரவியது. செவிலியர் நேரில் சென்று விசாரித்தபோது, குழந்தையின் உடலை அடக்கம் செய்து விட்டதாக கஸ்தூரி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த எருமப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் லலிதா, எருமப்பட்டி போலீசில் குழந்தை இறப்பு குறித்து புகார் அளித்தார். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால், குழந்தையை கொன்று நாடகமாடுகிறார்கள் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், போலீசாருக்கு நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தது. அதில் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கஸ்தூரியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியபோது,  குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்தபோது, தொட்டிலை வேகமாக ஆட்டி, சுவற்றில் தலையை மோதி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார்  கஸ்தூரியை நேற்று கைது செய்தனர். மேலும், குழந்தையை கொலை செய்த விவகாரத்தில், வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: