திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஊராட்சி தலைவர் மீது துணைத்தலைவர் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். பொதுமக்களுடன் இணைந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இது தொடர்பாக புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. மாதப்பூர் ஊராட்சி தலைவரான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் கடந்த ஆண்டு 197 குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு தலா 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு கட்டப்படும் வீடுகள், வணிக வளாகம், திருமண மண்டபம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்க லட்சக்கணக்கில் பணம் பெறுவதாகவும் ஊராட்சி துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.