சென்னை மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஏன் குழு அமைக்கக்கூடாது?: அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு Jul 16, 2021 ஐஏஎஸ் மெரினா கடற்கரை சென்னை: மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில், ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்கக்கோரி வேலுமணி என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், உலகின் பெரிய கடற்கரையான மெரினாவை முறையாக பராமரிப்பதில்லை. அதை பற்றி ஒருவரும் கவலை கொள்வதில்லை, என்றார். அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், மெரினா கடற்கரையை முறையாக பராமரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியின் 9வது மண்டல அதிகாரியையும், சென்னை மாநகர காவல் ஆணையரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். பின்னர் நீதிபதிகள், மெரினா கடற்கரையில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறதா, குப்பை தினமும் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, மெரினா கடற்கரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் கழிவறைகள் மற்றும் நடமாடும் கழிவறைகள் எத்தனை அமைக்கப்பட்டுள்ளன, கடற்கரை பராமரிப்பிற்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது, கடை உரிமையாளர்களிடம் இருந்து எவ்வளவு வாடகை வசூலிக்கப்படுகிறது, குற்றங்கள் நடக்காத வகையில் இரவு 10 மணிக்கு பிறகும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா, மெரினா லூப் சாலை அருகிலேயே மீனவர்களுக்கான மீன் அங்காடியை ஏன் அமைக்கக்கூடாது என்று கேள்விகளை எழுப்பினர். இதை தொடர்ந்து, மெரினாவின் அழகை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும். மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித் துறை, காவல்துறை, சுற்றுச்சூழல் மற்றும் சமுக ஆர்வலர்கள், வியாபாரிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவை ஏன் அமைக்கக்கூடாது என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்