பெங்களூரு: கொரோனா தொற்றினால் பலியான விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக கர்நாடக கூட்டுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்துக்காக பணிக்கு சென்று சம்பாதித்த தாய், தந்தை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் தொற்றுக்கு பலியானதால் ஒட்டுமொத்த குடும்பமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடகாவில் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்வோருக்கான ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத்தில் கொரோனாவுக்கு பலியானோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.