புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சிறிதுகாலம் தள்ளிவைப்பு: கொரோனா குறைந்த பிறகே திறப்பு..! அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சிறிதுகாலம் தள்ளி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநரிடம் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் நமச்சிவாயம் பேட்டியளித்தார். கொரோனா தொற்று முழுவதுமாக குறையாததால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா குறைந்து வருவதால் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற 16ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்நிலையில் புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார்.

கொரோனா தொற்று புதுச்சேரியில் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிகள் கொரோனா குறைந்தவுடன் திறக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் நாளை பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Related Stories: