தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இன்று முதல் 3 மாதத்துக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இன்று முதல் 3 மாதத்துக்க இலவச நிரந்தர உறுப்பினருக்கான சேர்க்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகவரித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வணிகர்களுக்கு இணையவழி வசதி சேவையை கடந்த மாதம் 16ம் தேதி அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். வணிகர்கள் இந்த இணையவழி சேவையினை எங்கிருந்தும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், இணையவழியில் பதிவு செய்ய சிரமம் ஏற்படின், அருகில் உள்ள வணிகவரிவிதிப்பு அலுவலகத்தை அணுகி தங்களின் பதிவை மேற்கொள்ளலாம்.  இதற்கு வரிவிதிப்பு அலுவலத்தில் இணையம் சார்ந்த சேவை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வணிகர்கள் இந்த இணையம் சார்ந்த சேவையினை பயன்படுத்த சிரமம் இருப்பின் அருகில் உள்ள வரிவிதிப்பு அலுவலகங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் நேரிடையாகவும் சமர்ப்பிக்கலாம்.

வணிகர் நல வாரியத்தை சீரமைத்து உறுப்பினர் சேர்க்கையை செம்மைப்படுத்தி திறம்பட செயல்படும் வகையில் சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இந்த வாரியத்தின் மூலம் நலத்திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் பதிவு பெற்று ”விற்ற முதல் அளவு” (Turn Over) ரூ.40 லட்சத்துக்குட்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் பதிவு பெறாத குறு வணிகர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர, சேர்க்கைக் கட்டணத் தொகையான ரூ.500 வசூலிப்பதிலிருந்து மூன்று மாதங்களுக்கு 15.7.2021 முதல் விலக்களித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.  எனவே வணிகர்கள், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: