ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் பங்காரு அடிகளார் தந்தைக்கு நினைவஞ்சலி

மதுராந்தகம்: ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில், ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் தந்தையின் நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரின் தந்தை கோபாலின் 22ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, சித்தர் பீடம் அருகே கோபால் நினைவு மண்டபத்தில் மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் நேற்று நடந்தது. இதையொட்டி, கோபால் நினைவு மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மக்கள் தொண்டு இயக்கம் தலைவர் அன்பழகன் தலைமையில் ஆதிபராசக்தி இளைஞர் அணி தலைவர் கோ.ப.செந்தில்குமார், வழக்கறிஞர் அகத்தியன் உள்பட பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான கறவை மாடு, ஆட்டுக்குட்டிகள், மிதிவண்டி, ஊனமுற்றோர் சைக்கிள், தையல் இயந்திரம் உள்பட பல நலத்திட்ட உதவிகளை ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் வழங்கினார். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தினர் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: