தமிழக கோயிலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சிலைகள் எந்த நாட்டில் இருந்தாலும் மீட்கப்படும்!: அமைச்சர் சேகர்பாபு உறுதி..!!

குமரி: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சாமி சிலைகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவற்றை மீட்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, சிலை கடத்தல் விவகாரத்தின் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு கடத்தப்பட்டிருக்கின்ற சிலைகளை கண்டறிந்து வருகிறோம். அவ்வாறு கடத்தப்பட்டு வெளிநாட்டில் இருக்கின்ற சிலைகளை அடையாளம் கண்டு மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வரும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற இருக்கிறது.

ஏ.டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி. அவர்களோடு ஒரு கலந்தாய்வு கூட்டத்தை நடத்தவிருக்கின்றோம். தமிழ்நாட்டின் கோவில்களில் கடத்தப்பட்ட சிலைகளை விரைவில் மீட்போம். அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ்நாட்டு சிலைகள் உள்ளன. இதனை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று சிலைகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றது. மேலும் எங்கெல்லாம் சிலைகள் கடத்தப்பட்டிருக்கின்றது என்ற புள்ளி விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அந்த சிலைகளையும் கூடிய விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார்.

Related Stories: