சென்னை: அதிமுக ஆட்சியில் உரிய நடைமுறையை பின்பற்றாமல் விடப்பட்ட ரூ.240 கோடி மதிப்பிலான 2 டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் விடுவதில் உரிய நடைமுறைகள் பின்பற்றாமல் அதிமுகவினருக்கு ஆதரவானவர்களுக்கு டெண்டர் விடப்பட்டதாக அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாக புகார்களை எழுப்பி வந்தது. இந்த புகார்களின் பேரில் சென்னை மாநகராட்சி ஆணையர் நடத்திய ஆய்வில் சில புகார்களில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் அடையாறு, அண்ணாநகர், கோடம்பாக்கம், ராயபுரம் உட்பட 43 இடங்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்பை புதுப்பிக்க மற்றும் சீரமைக்க கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டது.