மாணவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை சிவசங்கர் பாபா மீது போக்சோ பிரிவில் 2வது வழக்கு பதிவு: சிபிசிஐடி போலீஸ் நடவடிக்கை

சென்னை: ஆசீர்வாதம் செய்வதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் தங்கையையும் பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர்பாபாவை கைது செய்தனர்.

இதனையடுத்து, சிபிசிஐடி உயரதிகாரிகள் குழுவினர், சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் துருவிதுருவி விசாரணை நடத்தி, பல்வேறு ஆதாரங்களை சேகரித்தனர். இதன் பிறகு அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதுவரை 18 முன்னாள் மாணவிகள், சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுசில் ஹரி பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவரின் தங்கையையும் அவர், ஆசீர்வாதம் செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களும் சிபிசிஐடி போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி அளித்ததாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதைதொடர்ந்து நாளை அவரை சிபிசிஐடி போலீசார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அதைதொடர்ந்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளிலும் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: