சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலத்தை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் தற்போது 19,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு அதன் ஆயுட்காலத்திற்கு ஏற்றவாறு பயன்பாட்டை நிறுத்திக்கொள்வது வழக்கத்தில் இருந்து வந்தது. இந்தநிலையில், அரசு பேருந்துகளின் பயன்பாட்டு காலம் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான பயன்பாட்டு வரம்பு 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்தது. இது இனி வரும் காலங்களில் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அரசு பேருந்துகள் 7 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 6 ஆண்டுகள் பயன்பாட்டு காலம் இருந்தது. இது இனி வரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என நீட்டிப்பு செய்யப்படுகிறது. தற்போது புதிய சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பேருந்துகள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டு தரமான உதிரி பாகங்கள் இருப்பதால் அரசு பேருந்துகளின் பயன்பாட்டு காலத்தை அதிகரிக்கும் முடிவு வழிகாட்டுதல்களுடன் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது