டெல்லி : கேரளா மற்றும் மராட்டியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. அமைச்சர்கள் இடையே பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கு தளர்வுகளில் பொதுமக்கள் தனி மனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை மறந்து சுற்றி திரிவதாக குறிப்பிட்டார். கேரளா மற்றும் மராட்டியத்தில் கொரோனா அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றிய அமைச்சர்களின் செயல்பாடு மக்களின் அச்சத்தை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.