க.பரமத்தி அருகே அதிமுக ஆட்சியில் அமராவதி ஆற்றில் ஆக்கிரமித்து கட்டிய வட்டக்கிணறு அகற்றம்

*கோர்ட் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அதிரடி

க.பரமத்தி : க.பரமத்தி அடுத்த கோடந்தூர் ஊராட்சி மூலத்துறை பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அனுமதியின்றி அமராவதி ஆறுக்குள் வட்டக் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுத்து தனியார் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்ததை கண்டறியப்பட்டு நேற்று ஆக்கிரமிப்பு கட்டங்கள் பொதுப்பணித் துறையினரால் இடித்து அகற்றப்பட்டது.

க.பரமத்தி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சி மூலத்துறை பகுதியில் அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் நீண்ட நாள்களாக ஆக்கிரமிப்புகள் இருந்து வருகிறது. மூலத்துறை அமராவதி ஆற்றில் அரசு அனுமதியின்றி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்செல்வன் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமராவதி ஆற்றின் மைய பகுதியில் வட்டக் கிணறு அமைத்து அதன் அருகே கருங்கல் கட்டிடம் கட்டி ஆக்கிரமிப்பு செய்து அந்த கிணற்றின் மூலம் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

இதனையறிந்த அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மெய்ஞானமூர்த்தி நீதிமன்றத்தில் அமராவதி ஆற்றுப் பகுதியில் அரசு அனுமதியின்றி வட்டக் கிணறு அமைத்து அதன் மூலம் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்து வருவதை அகற்ற கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.இதையடுத்து ஆற்றுபுறம்போக்கு ஆக்கிரமிப்பு பகுதியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக சர்வே எண் 1230 இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள சம்மந்தப்பட்ட ரவிச்செல்வனுக்கு கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை அலுவலர்கள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டும் ஆக்கிரமிப்பை அவர் அகற்றிக் கொள்ளாததால், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணன் தலைமையில் உதவி பொறியாளர் ராமசந்திரன், இளநிலை பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் இரண்டு ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்களையும் ஆற்றில் உள்ள வட்ட கிணற்றை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதையொட்டி அரவக்குறிச்சி டிஎஸ்பி முத்துச்செல்வன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் க.பரமத்தி ரமாதேவி, வேலாயுதம்பாளையம் சிதம்பரபாரதி ஆகியோருடன் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் அதிகம் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: