வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையான பெரும்பள்ளம் ஊராட்சியில் புல்லூர் அருகே ஆந்திர அரசு சார்பில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பின்னர், 5 அடி உயரம் இருந்த தடுப்பணை 13 அடியாக உயர்த்தப்பட்டது. மேலும், ஆந்திர மாநில அரசு சார்பில் பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டியுள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழக-ஆந்திர வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தாண்டி தமிழகத்திற்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.