பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ உயிரிழந்த விவகாரம்.: காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நெல்லை காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவர் தனது கூட்டாளிகள் மூன்று பேருடன் சேர்ந்து ஆயுதங்களைப் பதுக்கிவைத்திருந்ததாக களக்காடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் ஏப்ரல் 22-ம் தேதி மற்றொரு வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைக்குள் இருந்த சக கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மனோ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் இது தொடர்பான வழக்கில் கைதி முத்து மனோ உயிரிழந்த விவகாரம் தொடர்பான நெல்லை காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. மேலும் நெல்லை மற்றும் வாகைகுளத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: