ஊராட்சி செயலர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்-திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

திருவாரூர் : ஊராட்சி செயலர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி செயலர் சங்கத்தினர் மனு அளித்தனர். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காலத்தில் ஊராட்சிகளில் பிளிச்சிங் பவுடர் போடுவது, கிருமிநாசி தெளிப்பது, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுவது மட்டுமின்றி கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல்களையும் அடக்கம் செய்யும் பணிகளை கண்காணித்து வருவதால் பெரும்பாலான ஊராட்சி செயலர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

எனவே ஊராட்சி செயலர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து உரிய நிவாரணம் மற்றும் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி போன்றவற்றினை வழங்கிட வேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வது மற்றும் பணிமூப்பு அடிப்படையில் இளநிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் மாநில பொதுச் செயலாளர் குமாரராஜா மற்றும் பொறுப்பாளர்கள் முருகானந்தம், குருசெல்வமணி, சங்கர், சூரியமூர்த்தி ஆகியோர் மனு அளித்தனர்.

Related Stories: