பாலியல் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்..!!

சென்னை: பாலியல் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை ஒருவர் அளித்த  புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

தொடர்ந்து, மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பின்னர், தலைமறைவான அவரை கடந்த 20ம் தேதி பெங்களூருவில் கைது செய்து சென்னை அழைத்து வந்த தனிப்படை போலீசார், மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர். 

சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு செல்போன், ஏ.சி., சோபா உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் நடத்திய சோதனையில் சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பது உறுதி ஆனாது. இதன் அடிப்படையில் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மணிகண்டனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக புழல் சிறையில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நீதிமன்றத்திற்கு வருகை தந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார். தொடர்ந்து மணிகண்டனை காவலில் எடுக்க தேவையான வாதத்தை வாதங்களை நீதிபதி முன் சார்பாக முன்வைக்கப்படும். இதையடுத்து மணிகண்டன் மீதான விசாரணைக்கு எத்தனை நாட்கள் காவல் வழங்கலாம் என நீதிபதி அறிவிப்பார்.

Related Stories: