நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா! பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர்! முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சி நான்: முதல்வர் உரை

சென்னை: தடியால் தட்டி தமிழினத்தை எழுப்பிய தந்தை பெரியாரையும், அன்பெனும் உயிராய் ஒருங்கிணைத்த பேரறிஞர் அண்ணா அவர்களையும், தனித்தனி ஊரில் பிறந்தவர்களையும் ‘உடன்பிறப்பு’ என்ற ஒற்றைச் சொல்லால் ஈர்த்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களையும்  நெஞ்சில் தாங்கி எனது பதிலுரையைத் தொடங்குகிறேன். ஆளுநர் அவர்கள் கடந்த 21 ஆம் தேதி, இந்த மாபெரும் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் நோக்கங்களையும், எண்ணங்களையும் எடுத்துக்காட்டக்கூடிய நல்லதோர் உரையை ஆற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அரசின் முதலமைச்சர் என்ற முறையிலும், தனிப்பட்ட நிலையிலும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆளுநர் அவர்களது உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, எனது உரையைத் தொடங்கும் அதேவேளையில், என்னை இந்த மாமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கக்கூடிய கொளத்தூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற மகத்தான வெற்றிக்குக் காரணமான அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும், தோளோடு தோள் நின்று பணியாற்றிய தோழமைக் கட்சியினருக்கும், பெரும் எதிர்பார்ப்புகளுடன் தங்களுக்குச் சேவை செய்வதற்கான பெரும் வாய்ப்பினை எங்கள் மீது நம்பிக்கை வைத்து வழங்கியிருக்கக்கூடிய அருந்தமிழ்நாட்டு மக்களுக்கும்,  முதற்கண் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

‘தமிழ்நாடு முதலமைச்சர்”என்ற இந்த அரிய ஆசனத்தைப் பார்க்கும்போதும், அதிலே அமரும்போதும், என்னுடைய எண்ணங்கள், கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகளையும், முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அந்த வரலாற்றைப் படைத்த தனிப்பெரும் நாயகர்களையும் சுற்றிச் சுழல்கின்றன. அதன் காரணமாக மெய்சிலிர்ப்பும், பிரமிப்பும், வியப்பும், உண்டாகின்றன. குறிப்பாக, திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சி, 1920 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டுவரை சுமார் 17 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. முதன்முதலாக சமூக நீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழி ஆதிக்கத்தைத் தகர்த்து, மகளிருக்கான உரிமைகளை அங்கீகாரம் செய்து, அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் தந்து, கல்வித் துறையில் சீர்திருத்தங்களைப் புகுத்தி, சமுதாய மாற்றங்களுக்கான விதைகளை விதைத்து, சமூக நீதியை நீர் ஊற்றி வளர்த்த கட்சி.  ஆங்கிலேயரின் இரட்டை ஆட்சி முறையில், மிகவும் குறைவான சட்ட அதிகாரங்களை வைத்துக் கொண்டு, தொலைநோக்குத் திட்டங்களையும் அக்காலத்தில் எவரும் சிந்தித்திராத சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிய கட்சி.  திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்டது.  

அன்றைக்கு இருந்த மிகக் குறைவான அதிகாரங்களைக் கொண்டே வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டியது நீதிக் கட்சி; பட்டியலின மக்களது நலனைப் பேணியது நீதிக் கட்சி; திருக்கோயில்களைக் காத்தது நீதிக்கட்சி; அத்தகைய நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.  தியாகராயரும், நடேசனாரும், டி.எம். நாயரும் போட்ட சமூகநீதி - சமத்துவ சமுதாயம் காணும் அடித்தளத்தில் அமைந்துள்ள ஆட்சிதான் இன்றைய தி.மு.க. ஆட்சி.   1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக் கழகம் அமர்ந்தபோது, “நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் இந்த ஆட்சி என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதேவழியில், எங்களது ஆட்சியும் நீதிக் கட்சியின் தொடர்ச்சிதான் என்பதைப் பெருமையோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.    

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா!  பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர்! முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சி நான்! ஏன், இந்த அரசு!  தமிழினத்தை நம்மால்தான் வாழ வைக்க முடியும் - தமிழினத்தை நம்மால்தான் வளர்ச்சி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு தி.மு.கழகத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்! இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாடு எட்டவேண்டிய இலக்கை, எமது தொலைநோக்குப் பார்வையைத்தான் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது உரையில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.  அன்று நீதிக்கட்சியின் முதலாவது பிரதம அமைச்சராக இருந்த கடலூர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி, முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், 5 முறை முதலமைச்சர் பொறுப்பேற்று 19 ஆண்டுகள் ஆட்சி செய்த சாதனைச் செல்வர், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்   ஆகியோரையும், முதலமைச்சராக இருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர்களையும், இந்த நேரத்தில் நினைவுகூர்வது என்னுடைய கடமை ஆகும். நமது முன்னோர்களை நினைவுகூர்வது என்பது, தமிழர் பண்பாட்டின் தவிர்க்க முடியாத முக்கியமான கூறு என்பதை மறந்துவிட முடியாது.  

கடந்த 2 நாட்களாக இந்த அவையிலே நடந்திருக்கக்கூடிய விவாதத்திலே, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளைச் சார்ந்த 22 மாண்புமிகு உறுப்பினர்கள், ஆளுநர் உரையின் மீது, தங்களுடைய சீரிய கருத்துகளை மையப்படுத்தி இங்கே உரையாற்றி இருக்கிறார்கள். உரையாற்றிய உங்கள் அனைவரது கருத்துகளையும் இந்த அரசுக்கு நீங்கள் சொல்லும் ஆரோக்கியமான ஆலோசனைகளாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். ஏனென்றால் நான் பேரறிஞர் அண்ணாவினுடைய அரசியல் வாரிசு. முத்தமிழறிஞர் கலைஞருடைய கொள்கை வாரிசு. சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது முன்வைத்த கோரிக்கைகள் - தொகுதி சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளன. 

துறை அதிகாரிகளோடு கலந்தாலோசித்து நிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஐந்து ஆண்டுகால ஆட்சி உரிமை கொண்ட அரசு இது. இதில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் - கொள்கைகள் - கோரிக்கைகள் ஆகிய அனைத்தையும் ஆளுநர் உரையில் மட்டுமே முழுமையாகச் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை என்பது, அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம். அதில் அரசாங்கத்தின் ஐந்தாண்டுகளுக்கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தையும் அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம்தான். அனைவருக்கும் எளிதில் புரியும்படி சொல்லவேண்டும் என்றால், இது ஒரு “ட்ரெய்லர்”மாதிரி.  “முழு நீளத் திரைப்படத்தை விரைவில் வெள்ளித்திரையில் காண்க” - என்று முன்பெல்லாம் சொல்லப்பட்டு வந்ததைப்போல, இந்த அரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ள உள்ள பயணம், பயணத்தில் எதிர்கொள்ளவிருக்கிற இடர்ப்பாடுகள், அந்த இடர்ப்பாடுகளைக் களைந்தெறியும் சூட்சுமங்கள், சவால்கள் - அவற்றைச் சந்திப்பதற்கான சாதுரியங்கள் என அனைத்தும் விரைவில் இந்தப் பேரவையிலே வைக்கப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் விரிவாக இடம்பெறும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

“பொறுத்தார் பூமி ஆள்வார்”என்பது பழமொழி. நாங்கள் 10 ஆண்டுகள் பொறுத்திருந்தோம்; இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். அதில் உங்களுக்கு ஒரு துளி கூட சந்தேகம் வேண்டாம்.  

“தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் எதையும் நிறைவேற்றவில்லை”என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து இன்றோடு 49 நாட்கள்தான் ஆகி இருக்கின்றன. ஆனாலும், என் மீதும், திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீதும் இருக்கின்ற நம்பிக்கையின் காரணமாக, இப்போதே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கலாமே என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் மாண்புமிகு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு முதலில் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.  தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.     அதில் எந்தவிதமான சந்தேகமும், யாரும் படவேண்டிய அவசியமில்லை.  

ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து நாங்கள் மக்களுக்கு கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறோம். அதற்கான பணிகளில்தான் எங்களை நாங்கள் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம். பல்வேறு ஊடகங்களில் தி.மு.க. அரசினுடைய முதல் முப்பது நாட்கள் எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டு, அதற்கு பொது மக்கள் அளித்த பதில்களை அனைவரும் பார்த்திருப்பீர்கள். தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லையே என்று பலரும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  எங்களுக்கு வாக்களித்தவர்கள், இவர்களுக்கு வாக்களித்தோமே என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலும், வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்க தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய வகையிலும், எனது பணி இருக்கும்” என்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய நினைவிடத்தில் தி.மு.க. வெற்றி பெற்றவுடன் ஊடகங்கள் வாயிலாக நான் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்தேன். அந்த வகையில், நம்முடைய பணிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று எண்ணி, இன்னும் சிறப்பாகச் செயல்பட உத்வேகம் கொள்கிறேன்.

Related Stories: