ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு படிப்படியாக அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

காஷ்மீரில் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில்  தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.  

இதனையடுத்து, இந்தக் கூட்டத்தில்  பங்கேற்குமாறு காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு அண்மையில் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கார் கூட்டமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் கொரோனா பரிசோதனை நடத்தி, கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வருமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: