மராட்டியம், கேரளவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டுபிடிப்பு: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் !

சென்னை: தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மராட்டியம், கேரளவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டா வைரஸின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள டெல்டா பிளஸ் பாதிப்பு, தென் ஆப்ரிக்காவில் காணப்படும் பீட்டா வகை வைரஸின் மரபணுக்களையும் உள்ளடக்கியதாக அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த தொற்றை தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாது எனவும், இந்த புதிய வைரஸ் நோய் எதிர்ப்பு திறனையும் முழுவதுமாக அழித்துவிடும் என நோய் தொற்று ஆய்வு நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த வைரஸை அச்சுறுத்தலுக்கு உரியது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. தற்போது கோவாக்சின் கொண்டு புதிய வகை வைரஸை அழிப்பது தொடர்பான ஆராய்ச்சியை புனேவில் செயல்படும் மருத்துவ ஆராய்ச்சிய கவுன்சில் முன்னெடுத்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளை நிற திரவத்தை பயன்படுத்தி, தொற்றுக்கு எதிராக உடலில் உள்ள ஆன்டிபாடி எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர். இந்நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் தமிழகம், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பரவி இருப்பதாகவும், இதனால் 40 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: