குளித்தலை அடுத்த தண்ணீர் பள்ளியில் 10 ஆண்டாக தென்கரை வாய்க்கால் படித்துறையில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்-இளைஞர்கள் சமூக சேவை

குளித்தலை : கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து சித்தலவாய் லாலாபேட்டை கே பேட்டை வதியம் மணத்தட்டை எல் அரசு பாலம் குளித்தலை தண்ணீர் பள்ளி ராஜேந்திரம் மருதூர் வழியாக பெட்டவாய்த்தலை வரை செல்லும் தென்கரை பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு படித்துறைகள் ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டது.

இதனால் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் குளிப்பதற்கும் துணிகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகம் ஏற்பட்ட நிலையில் வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பை கூளங்களை விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் தென்கரை வாய்க்கால் ஓரத்தில் கொட்டி விடுகின்றனர்.

இதுபோன்று பல ஆண்டுகளாக கொட்டி வந்ததால் தண்ணீர் பள்ளி பகுதியில் உள்ள தென்கரை வாய்க்காலில் படித்துறைகள் மண் மேடாக காட்சியளித்து 10 ஆண்டுகளுக்கு மேலாக மூடிகிடந்துள்ளது.

தற்போது வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாததால் அப்பகுதி இளைஞர்கள் ஊரடங்கு காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என திட்டமிட்டு 10 ஆண்டு காலமாக குப்பை கூளத்தால் மூடிக்கிடந்த தென்கரை வாய்க்கால் படித்துறையை சமூக அக்கறையோடு ஒன்றிணைந்து சுத்தம் செய்து பழுதடைந்த படிக்கட்டுகளை சீர்செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். இச்செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்களை பாராட்டினர்.

Related Stories: