ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை:  கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ மருந்தான கபசுர குடிநீர் பாக்கெட்களை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்க கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அவர் தனது மனுவில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் வினியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்து பலியாவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும், பதிவு செய்யப்பட்ட சித்த மருத்துவர்களை கொண்டு சித்தா சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

 இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமுர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  மனுதாரரின் கோரிக்கை மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது. கபசுர குடிநீரின் நோய் எதிர்ப்பு திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும். எனவே, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: