தலா 25 காசுகள் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு: சென்னை,சேலத்தில் 100ஐநெருங்கியது

சேலம்: நாடு முழுவதும் இம்மாதம் 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலை நேற்றும் அதிகரிக்கப்பட்டது. சென்னை, சேலத்தில் பெட்ரோல் விலை 100ஐ நெருங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைக்கிறது. நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் 100க்கும் அதிகமான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100ஐயும், ஒரு லிட்டர் டீசல் 98ஐயும் எட்டியுள்ளது. நடப்பு மாதத்தில் 11வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை தலா 25 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் இம்மாதம் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 2.66ம், டீசல் 2.72ம் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் 98.40க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 25 காசு உயர்ந்து 98.65க்கு விற்கப்பட்டது. டீசல் 92.58ல் இருந்து 25 காசு உயர்ந்து 92.83க்கு விற்பனையானது.

இதுவே சேலம் மாவட்ட பகுதியில் நேற்று முன்தினம் 98.82க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று 25 காசு உயர்ந்து 99.07 ஆகவும், டீசல் 93.02ல் இருந்து 25 காசு உயர்ந்து 93.27 ஆகவும் அதிகரித்தது. சேலம் மாநகர பகுதியில் பெட்ரோல் 99.46க்கும், டீசல் 93.55க்கும் விற்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: