பாலியல் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பாஜக பிரமுகர் அடைக்கலம்!: போலீசார் விசாரணையில் ஒப்புதல்..!!

சென்னை: திரைப்பட நடிகையை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு தென்மாவட்ட பாஜக பிரமுகர் அடைக்கலம் கொடுத்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் துணை நடிகை அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையின் போது மணிகண்டன் தென்மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரது உதவியாளர், ஓட்டுநர், பாதுகாவலர் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கூறிய மணிகண்டன், தலைமறைவானார். அவர் தாக்கல் செய்த மனுவை கடந்த 16ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து பெங்களூருவில் பதுங்கியிருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

போலீசார் மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில்,  அவர் தென்மாவட்டத்தை சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகர் ஒருவரது வீட்டில் 10 நாட்கள் தங்கி இருந்தாக தெரிவித்துள்ளார். அவரது உதவியுடன் பெங்களூருவுக்கு தப்பி சென்றதாக மணிகண்டன் கூறியுள்ளார். இதையடுத்து மணிகண்டனுக்கு அடைக்கலம் அளித்த பாஜக முக்கிய பிரமுகர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். 

Related Stories: