தாம்பரம்: ஊரடங்கு தளர்வில் காய்கறி, மளிகை பொருட்கள் கடை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும், டீ கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும் (பார்சல் மட்டும்) இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 வரையும் செயல்பட அனுமதிக்கப்பட்டது. மேலும், பேக்கரி, உணவகங்கள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவற்றிற்கும் அனுமதி தரப்பட்டது. அதேவேளையில், தமிழக அரசு அறிவித்த சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி உபயோகித்தல் முதலான கொரோனா விதிகள் முறையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டது. மாநகராட்சியினர், சுகாதார துறையினர் இதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விதிகளை மீறும் கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.