மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு ஒரே வாரத்தில் 7000 மாணவர்கள் சேர்ந்தனர்: பெற்றோர் ஆர்வம் காட்டுவதாக அதிகாரிகள் தகவல்

சென்னை:  மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் 6,879 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம், ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும், அதற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஆரம்பப் பள்ளிகள் 119, நடுநிலைப்பள்ளிகள் 92, உயர்நிலைப்பள்ளிகள் 38, மேல்நிலைப்பள்ளிகள் 32 என 281க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை  நடந்து வருகிறது.இந்த பள்ளிகளில் கடந்த 2019-20ம் ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்புகள் வரை 18,605 மாணவர்கள் புதிதாக வந்து சேர்ந்துள்ளனர், அதில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 6,533 பேர் வந்துள்ளனர். இதேபோல் 2020-21ம் ஆண்டில் 27,843 பேர் மாநகராட்சி பள்ளிகளில் வந்து சேர்ந்தனர். அதில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி 14,763 பேர் சேர்ந்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் கடந்த ஒன்றரை வருடங்களாக பொதுமக்கள் வருமானமின்றி கட்டணம் செலுத்த முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் நிறைய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சான்றிதழை பெற்று அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதேபோன்று, சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளிலும் பெற்றோர்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில்  2021-2022ம் ஆண்டில் கல்வியாண்டிற்க்கு தற்போது சேர்க்கை நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6,897 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதேபோன்று மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுகளில் அதிகமானவர்கள் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாநகராட்சி பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். அதனால் மாணவர்கள் சேர்க்கையும் வேகமாக நடந்து வருகிறது. அதற்கு காரணம், மாநகராட்சி பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, கம்ப்யூட்டர் வகுப்புகள், தரமான கல்விகள் என தனியார் பள்ளிகளின் அளவிற்கு கற்பிக்கப்படுகிறது.  அதனால் மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயர்ந்து காணப்படுகிறது.

 மேலும் கொரோனா தொற்றினால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானமின்றி இருக்கும் வகையில் கட்டணம் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இதனால்  நிறைய பேர் அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கு தகுந்தாற்போல் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றனர். ஆங்கில வழிக்கல்வி, கம்ப்யூட்டர் வகுப்புகள், தரமான பயிற்றுமுறை இருப்பதால் தற்போது மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்ந்து காணப்படுகிறது.

Related Stories: